எங்கள் மீது தாக்குதலா? ஐநாவிடம் முறையிட பாகிஸ்தான் முடிவு.. சீனா ரியாக்சன் இதுதான்!
இந்தியா பாகிஸ்தான் மண்ணில் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது குறித்து ஐநா சபையில் பாகிஸ்தான் முறையிட முடிவெடுத்து உள்ளது.
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் மண்ணில் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது குறித்து ஐநா சபையில் பாகிஸ்தான் முறையிட முடிவெடுத்து உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளையும் உதவிக்கு அழைக்க உள்ளது.
இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தாக்குதல் பாகிஸ்தானை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்து பாகிஸ்தான் ஆலோசனை செய்து வருகிறது.
புகார்
பாகிஸ்தான் நாடு சார்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து ஐநாவின் கவுன்சிலில் புகார் அளிக்க உள்ளார். காலையில் குரேஷி நடத்திய ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் பாகிஸ்தான் இதற்காக கடிதம் எழுத உள்ளது.
நட்பு நாடுகள்
அதேபோல் பாகிஸ்தான் தன்னுடைய நெருங்கிய நட்பு நாடுகளுக்கும் இதுகுறித்து புகார் அளிக்க போகிறது. சீனா, சவுதி ஆகிய நாடுகளுக்கு முதற்கட்டமாக தங்கள் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாகிஸ்தான் புகார் அளிக்க முடிவெடுத்து உள்ளது. இவர்களை பாகிஸ்தான் உதவிக்கு அழைக்க கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
சீனா என்ன
இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங் பேசுகையில், நாங்கள் இந்த பிரச்சனையை கவனித்து வருகிறோம். தெற்கு ஆசியாவில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிக முக்கியமான நாடுகள். இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்பும், புரிந்துணர்வும்தான் ஆசியாவில் நிலையான அமைதிக்கு வழி வகுக்கும்.
இரண்டு நாடுகள்
இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் பிரச்சனை ஏற்படும். இரண்டு நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை சேர்ந்து எடுக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதே பலரின் நோக்கம்., என்று கூறியுள்ளார்.