பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு!
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்த வாரமே வழக்கு தொடுக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இரண்டு வாரம் முன்பு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
இதனால் தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது கடும் கோபத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கு எதிராக ராஜாங்க ரீதியாக காய்களை நகர்த்த அந்நாடு முயன்று வருகிறது..
முடிவு இல்லை
காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சீனா இரண்டு நாடுகளும் சேர்த்து உலக அளவிற்கு கொண்டு சென்றது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆலோசனையின் முடிவில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.
வழக்கு
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் வழக்கு தொடுக்க உள்ளது. இது தொடர்பாக இந்த வாரமே வழக்கு தொடுக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
என்ன பேட்டி
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அளித்துள்ள பேட்டியில், ஜம்மு காஷ்மீர் விஷயத்தை நாங்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறோம். பல கட்ட ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளோம். அனைத்து சட்ட விதிகளையும் இதில் ஆராய்ந்து இருக்கிறோம்.
என்ன மீறல்
ஜம்மு காஷ்மீரில் இந்தியா அத்துமீறி வருகிறது. அங்கு மனித உரிமை மீறல்களை இந்தியா செய்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு நாங்கள் தற்போது சர்வதேச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.