இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்.. குடியரசுத் தலைவர் ராம்நாத்துக்கு அனுமதி மறுப்பு
இஸ்லாமாபாத்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறந்து செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி இந்திய விமானப்படை பாலகோட் தாக்குதல் நடத்திய பின்னர் பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மார்ச் மாதம் ஒரு சில விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி அளித்தது. ஆனால் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீடித்து வருகிறது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வரும் திங்கள் அன்று பயணிக்க உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்திற்கு குடியரசுத் தலைவர் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசிடம் இந்தியா சார்பில் அனுமதி கோரப்பட்டு இருந்தது.
ஆனால் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் கோபத்தில் உள்ள பாகிஸ்தான் அரசு குடியரசுத் தலைவர் ராம்நாத் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல அனுமதி மறுத்துள்ளது.
காஷ்மீரில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளாராம்.