அனுபம் கெருக்கு விசா தர மறுத்த பாகிஸ்தான்... பாதுகாப்பு காரணத்திற்காகவாம்!
லாகூர்: பாதுகாப்பு காரணங்களுக்காக பிரபல இந்தி நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, தங்களது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல நடிகர் அனுபம் கெருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று அனுபம் கெரும் பாகிஸ்தான் செல்ல ஆர்வமாக இருந்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அவருக்கு விசா தர மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அனுபம் கெர் கூறுகையில், "நான் பாகிஸ்தான் செல்வதற்கு தயாராக இருந்தேன், ஆனால் தொழில்நுட்ப காரணமாக இது நடைபெறாது என்று எனக்கு அழைப்பு விடுத்தவர்கள் தெரிவித்து உள்ளனர்" என்றார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் செய்தி நாளிதழான எக்ஸ்பிரஸ் டிரிபுயூன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பெஷாவர் ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அனுபம் கெர் தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு உள்ளது. அதாவது, பாகிஸ்தான் பள்ளித் தாக்குதலின் போது, ‘இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் தீவிரவாதம் தற்போது மிகவும்பாதிக்கும் சூழ்நிலையில் உள்ளது,' என அனுபம் கெர் தெரிவித்து இருந்தார்.
மேலும், ‘தீவிரவாதத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது, மனிதாபிமானம் இல்லாமல் குழந்தைகளை கொல்வது என்னை மிகவும் பாதித்துவிட்டது... தீவிரவாத தாக்குதலில் 150 குழந்தைகள் கொல்லப்பட்டது என்னை பெரிதும் பாதித்துவிட்டது,' என்றும் அனுபம் கெர் தெரிவித்ததாக அப்பத்திரிக்கையில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.