பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சருக்கு வாழ்நாள் தகுதி நீக்கம்.. இஸ்லாமாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சரை வாழ்நாள் தகுதி நீக்கம் செய்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பை தகுதிநீக்கம் செய்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மீது இம்ரான் கான் கட்சியின் பிரமுகரான உஸ்மான் டார் தாக்கல் செய்த வழக்கில், ஐக்கிய அரபு எமிரேட்டில் பணிபுரிவதற்கான பணி அனுமதிச்சான்றிதழ் வைத்திருப்பதை தனது பிரமாணப் பத்திரத்தில் மறைத்துவிட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பை வாழ்நாள் தகுதி நீக்கம் செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அந்த தீர்ப்பில், ஐக்கிய அரபு எமிரேட்டில் பணிபுரிவதற்கான சான்றிதழ் வைத்திருந்ததை கடந்த 2013ம் ஆண்டு வேட்புமனுத்தாக்கலின் போதும், வெற்றி பெற்று பிரமாண பத்திரிகை தாக்கல் செய்யும் போது சமர்பிக்காமல் மறைத்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பனாமா லீக்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு நிதியமைச்ச்சர் வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கவாஜா ஆசிப்பின் வழக்கின் தீர்ப்பும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கவாஜா ஆசிப் தெரிவிக்கையில், தான் எந்த சான்றிதழையும் மறைக்கவில்லை எனவும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.