பாகிஸ்தான் தேர்தலில் பயங்கரம்.. குவெட்டா குண்டுவெடிப்பில் 23 பேர் பலி
பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறும் வேளையில் குவெட்டாவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 23 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்றுவரும் வேளையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 23 பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் பாதுகாப்புக்காக பாகிஸ்தான் முழுவதும் 3,70,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா தொகுதியில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
அதே போல, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடி நிலையத்துக்கு வெளியே இரண்டு கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டதில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
அதே போல, பாகிஸ்தானின் ஸ்வாபி மாவட்டத்தின் நவன் காளி வாக்குச்சாவடியில் அந்நாட்டின் அவாமி தேசிய கட்சியினருடன் நடந்த மோதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் கொல்லப்பட்டார்.
அதே போல, பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லர்கானாவில் ஷா முஹமது பள்ளி அருகே வாக்குச்சாவடிக்கு வெளியெ நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டு டிஐஜி அக்பர் ரியாஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் பாகிஸ்தான் மக்கள் கட்சி முகாமைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். வன்முறை தாக்குதல்கள் இருப்பினும் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பல இடங்களில் எதிரெதிர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபடுவது நடந்துவருகிறது.