தேர்தலில் போட்டியிட்ட தீவிரவாத இயக்கங்கள்.. கூண்டோடு விரட்டியடித்த பாக். மக்கள்!
பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்ட தீவிரவாத இயக்கங்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறது.
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்ட தீவிரவாத இயக்கங்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறது. தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களை அந்நாட்டு மக்கள் புறந்தள்ளி இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது . பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.பாகிஸ்தானில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி 113 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அந்நாட்டின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க இருக்கிறார்.
இந்த தேர்தலில் பாகிஸ்தானில் இருக்கும் சில தீவிரவாத இயக்கங்களும் நின்றது. மும்பை 26/11 குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஜமாத் உத் தவா உள்ளிட்ட பல இயக்கங்கள், இந்த தேர்தலில் தங்கள் வேட்பாளரை நிறுத்தியது. ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சையது உட்பட சில முக்கியமான நபர்களும் நேற்று வாக்களித்தனர்.
இந்த தீவிரவாத இயக்கங்களில் பெரும்பாலான கட்சிகளுக்கு, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஜமாத் உத் தவா உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அல்லா ஹு தெஹ்ரிக் என்ற அனுமதி பெற்ற கட்சியின் கீழ் போட்டியிட்டது.
இதில் எந்த ஒரு கட்சியும் வெற்றிபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய எந்த கட்சியும் அங்கு வெற்றிபெறவில்லை. தீவிரவாத பின்புலம் கொண்ட ஒரு வேட்பாளர் கூட அங்கு வெற்றிபெறவில்லை.
ஹபீஸ் சையத்தின் மகன் லாகூருக்கு அருகில் போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவி இருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தானில் மக்கள், தீவிரவாத இயக்கங்களை புறந்தள்ளி இருக்கிறார்கள் என்பது தெளிவாகி இருக்கிறது.