பாகிஸ்தான் மாறப் போகுது.. இம்ரான் பிரதமராகப் போகிறார்.. அது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றால், பாகிஸ்தான் இந்தியாவின் உறவில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றால், பாகிஸ்தான் இந்தியாவின் உறவில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு, ஆசிய கண்டத்தில் சில புதிய பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.
''பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான்'', இன்னும் இந்த வாக்கியம் முழுமை பெற இன்று மாலை வரை காத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் தனிப்பெரும்பான்மை பெற 137 பேர் தேவை. தற்போது இம்ரான் கானின் பிடிஐ கட்சி 113 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அந்த கட்சி எப்படியும் பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.
ஊழலுக்கு எதிரானவர்
பாகிஸ்தானில் மதத்தை பேசி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்தியில் இவர் அதிகமாக, ஊழலை பேசி ஆட்சியை பிடித்து இருக்கிறார் என்று கூறலாம். புட்டோவின் ஆட்சி குறித்தும், கடந்த நவாஸ் ஷெரீப்பின் ஆட்சி குறித்தும், அப்பாஸியின் ஆட்சி குறித்தும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டு வைத்தார். உலகப் பொருளாதாரம் குறித்து பேசினார். இவரது, பொருளாதார அணுகுமுறை, கண்டிப்பாக, ஆசிய கண்டத்தில் இந்தியாவிற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த பாதிப்புகள் இனிப்பானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு எதிராக பேசுவார்
இம்ரான் கான், எடுத்திருக்கும் நிலைப்பாடுகளில் மிக முக்கியமானது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு. கிட்டத்தட்ட வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக சில இடங்களில் அவர் பேசி இருக்கிறார். நவாஸ் ஷெரீப்பின் இந்தியாவுடனான நட்பு போக்கை வெளிப்படையாக அவர் சாடி இருக்கிறார். அதேபோல் இந்திய ராணுவத்தின் அத்து மீறலை பிரச்சாரத்தில் எந்த அச்சமும் இன்றி பேசி இருக்கிறார்.
தீவிரவாத நிலைப்பாடு
இவரது தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு பலரால் புரிந்து கொள்ள முடியாதது. அவர்தான் பாகிஸ்தான் அரசியலில் ''நல்ல தீவிரவாதம் கெட்ட தீவிரவாதம்'' என்ற வார்த்தையை உருவாக்கியவர். அவர் பாகிஸ்தானில் இருக்கும், பாகிஸ்தான் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு சில தீவிரவாத குழுக்களை ஆதரிக்கிறார் என்று புகார் இருக்கிறது. அதேபோல் சமயத்தில் பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க விரும்பும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இருக்கிறார். எப்படி பார்த்தாலும் இந்தியாவிற்கு இது நல்லது இல்லை.
ராணுவ ஆட்சி
இம்ரான் கான் பார்க்க ஜனநாயகவாதி போல இருந்தாலும் அப்பாஸி அளவிற்கும், நவாஸ் ஷெரிப் அளவிற்கும் அவர் ஜனநாயகவாதி கிடையாது. இனி பாகிஸ்தானில் நடக்க போவது மறைமுக ராணுவ ஆட்சி என்று கூட கூறலாம். ஆம், இம்ரான் கான் ராணுவத்தால் சில இடங்களில் நேரடியாகவும் பல இடங்களில் மறைமுகமாகவும் ஆதரிக்கப்பட்டவர். அதேபோல் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு நண்பனாக இருக்கிறார். அவரின் இந்த கொள்கை இந்திய உறவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
காஷ்மீர் பிரச்சனை
அவரின் ராணுவ ஆதரவு காரணமாக காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதவாது சில தலைவர்கள் காஷ்மீரில் அமைதியை விரும்பினால், இவர் போருக்கு ஆதரவு தருகிறார் என்று கூட கூறலாம். காஷ்மீரில் இந்திய ராணுவம் அத்து மீறுகிறது, இந்திய ராணுவத்தை முடக்க வேண்டும் என்றுள்ளார். அந்நாட்டு ராணுவத்தின் குரலாக இது பார்க்கப்படுகிறது.
மோடிக்கு எதிரான நிலைப்பாடு
மிக முக்கியமாக இந்தியா பாகிஸ்தான் உறவை பாதிக்க போவது இவரின் மோடிக்கு எதிரான நிலைப்பாடுதான். மோடி குறித்து இவர் வெளிப்படையாக சில இடங்களில் பேசி இருக்கிறார். பல இடங்களில் மோடி நவாஸ் ஷெரிப் நட்பு குறித்து கோபமாக பேசி இருக்கிறார். இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து அவர் பட்டவர்த்தனமான பேசி இருக்கிறார். இதனால் அவர் பதவியேற்பு பாஜகவிற்கு பெரிய தலைவலியாக இருக்கும்.
இனி கஷ்டம் தான்
இத்தனை விஷயங்களை பார்க்கும் போது, பாகிஸ்தான் இந்திரா காந்தி போல வலுவான தலைவர் ஒருவரை தேர்வு செய்துள்ளது. ஆனால், ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும், தேவையான சமயங்களில் தீவிரவாதத்தை ஆதரிக்கும், இந்தியாவிற்கு எதிரான முடிவுகளை எடுக்கும் ஒரு தலைவரை தேர்வு செய்து இருக்கிறது. இது இரண்டு நாட்டு உறவில் பெரிய சிக்கலை உண்டாக்கும் என்று அரசியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள்.