நவாஸ் ஷெரீப் அத்தியாயம் முடிந்தது.. வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட் தடை!
இஸ்லாமாபாத் : பனாமா லீக்ஸ் விவகாரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பனாமா லீக்ஸ் தொடர்பான வழக்கில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று கடந்தாண்டு ஜூலை மாதம் தீர்ப்பு அளித்தது.
அவரை பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இதுதொடர்பான தனி வழக்கை ஐந்து நீதிபதிகள்
அடங்கிய தனி பெஞ்ச் விசாரித்து வந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாகிஸ்தான் அரசியல் சாசனத்தின் படி, யார் ஒருவர் தனது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அந்தத் தடை வாழ்நாள் முழுவதும் பொருந்தும் என்று தீர்ப்பளித்தனர்.
இதனையடுத்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.