பாகிஸ்தானில் 15 வயதில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 23 ஆண்டுகள் கழித்து தூக்கு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 15 வயதில் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவருக்கு 23 ஆண்டுகள் கழித்து புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அப்தாப் பகதூர். கிறிஸ்தவரான அவர் 15 வயதில் சபிஹா பாரியா என்ற பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களை கொலை செய்ததாக கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்தாபுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அப்தாபை போலீசார் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தி செய்யாத கொலையை அவர் செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி வைத்துள்ளனர். அப்தாபை அவரது முதலாளி குலாம் முஸ்தபா தான் இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளார் என்று மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்தாபுக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அவர் சிறையில் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நான் ஒரு கலைப் பிரியன். நான் கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் தவித்தேன். என்னை தூக்கிலிடும் நாட்களை எண்ணுவதே மிகவும் வேதனையானது. உண்மையில் நான் தூக்கிலிடப்படும் முன்பு பலமுறை இறந்துவிட்டேன்.
ஒரு கிறிஸ்தவராக இருப்பதால் சிறையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஓவியம் வரைவது மற்றும் கவிதை எழுதுவது தான் என் வேதனையை குறைத்தது.
கடந்த டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள பள்ளி ஒன்றில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தி ஏராளமான குழந்தைகளை கொன்ற பிறகு பாகிஸ்தான் அரசு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அதன் பிறகு அப்தாபையும் சேர்த்து மொத்தம் 150 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.