பாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!
இஸ்லாமாத்: பாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடையை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பிப்ரவரி 26ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ரேடார் கண்காணிப்புகளை மீறி, இந்திய விமானப்படை நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது அந்நாட்டு ராணுவத்திற்கும், அரசுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாடு தடை விதித்தது.
தற்போது இந்த தடையை மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அரசு நீட்டித்துள்ளது. வரும் 28ந் தேதி வரை பாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எனினும், 11 வழித்தடங்களில் தெற்கு பகுதியில் இரண்டு வழித்தடங்களை பாகிஸ்தான் திறந்தது. மேற்கு நோக்கி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் இந்த தடத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிழக்கு எல்லைப் பகுதியில் தடை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தான் நாட்டில் நேற்று துவங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவர் முதலில் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்தி செல்ல திட்டமிட்டு அனுமதி கோரப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அனுமதியும் வழங்கியது. ஆனால், திடீரென பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்தாமல் வேறு வழியில் நேற்று கிர்கிஸ்தான் சென்றடைந்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார். இந்த நிலையில், தனது நாட்டு வான் வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடையை நீடிப்பதாக நேற்று இரவே பாகிஸ்தான் அறிவித்தது. மூன்றாவது முறையாக தடையை பாகிஸ்தான் அரசு நீட்டித்துள்ளது.
தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ பிரஸ்கார் விருதுகள் அறிவிப்பு
பாகிஸ்தானை புறக்கணிக்கும் வகையில் இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருவது அந்நாட்டுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. தீவிரவாதிகள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்ற ரீதியில் இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.
அண்மையில் நடந்த பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு பிற அண்டை நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இப்போது பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்துவதையும் பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார்.
ஷாங்காய் மாநாட்டிலும் பாகிஸ்தானை இந்தியா புறக்கணித்துள்ளது. இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுடன் மிக கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை கடந்த மே 31ந் தேதி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.