போர் பதற்றத்திற்கு நடுவே... பாலிவுட்டால் பாக். திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் ‘பீதி’யைப் பாருங்கள்!
இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் காரணமாக, பாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டால் தங்களுக்கு 70 சதவீதம் வரை நஷ்டம் ஏற்படும் என்ற கலக்கத்தில் உள்ளது பாகிஸ்தான் திரைத்துறை.
காஷ்மீர் விவகாரம், யூரி தாக்குதல் போன்ற தொடர் பிரச்சினைகளுக்கு இடையே தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது இந்தியா. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என அந்நாட்டு திரைத்துறை பெரும் கலக்கத்தில் உள்ளது.
அதாவது கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ரிலீசாகும் பாலிவுட் படங்களை பாகிஸ்தானில் அதிகமாக திரையிட்டு லாபம் பார்த்து வருகிறது அந்நாடு. மேலும் அங்கு வெறும் பாகிஸ்தான் திரைப்படங்களைக் கொண்டு மட்டும் அந்நாட்டு திரைத்துறை இயங்கவில்லை. 50-70 படங்கள் வரை பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்கள்தான் பாகிஸ்தானில் திரையிடப்படுகிறது. சில பாலிவுட் திரைப்படங்கள் பாகிஸ்தானில் ரூ.100 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில், பாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருப்பது, பாகிஸ்தான் திரைத்துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனபோதும், இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் நிரந்தரமானதாக அமைந்து விடாது என்பதில் அவர்கள் நம்பிக்கையாக உள்ளனர். ஏனெனில், இந்த விரிசல் தற்காலிகமானதாக இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் திரைத் துறைக்கு பாதிப்பு பெரிய அளவு இருக்காது.
ஒருவேளை இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான விரிசல் நிரந்தரமானால், அங்குள்ள பல பொழுதுபோக்கு வணிக வளாகங்கள் மூடும் நிலை ஏற்படும். அந்நாட்டு திரைத்துறைக்கு 70 சதவீதம் வரை நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.