பாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்
தோஹா: கத்தார் மன்னர், ஷேக் தமீம் பின் ஹமாத் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை முடித்த அதே, நாளில், 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு பேக்கேஜை பாகிஸ்தானுக்கு, கத்தார் நாடு வழங்க முன்வந்துள்ளது.
கடந்த 11 மாதங்களில் பாகிஸ்தானை நிதி பிரச்சினையிலிருந்து மீட்டெடுக்க, முன்வந்த நான்காவது நாடு கத்தார்.
முன்னதாக, சீனா 4.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு டெபாசிட் மற்றும், வணிக கடன்களை வழங்கியது. சவூதி அரேபியா 3 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்க வைப்புத்தொகையும், 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் சப்ளை வசதியையும் வழங்கியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்க டெபாசிட் கொடுத்தது.
டெபாசிட் மற்றும் முதலீடுகள்
கத்தாரின் நிதி உதவி பற்றி, அதன் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி அறிவித்துள்ளார். "மன்னர் உத்தரவின் பேரில், துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசிற்கு, மொத்தம் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெபாசிட் மற்றும் நேரடி முதலீடுகளை அறிவிக்கின்றனர்" என்று கத்தார் செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
விருது கொடுத்த பாகிஸ்தான்
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் வருகை தந்த கத்தார் மன்னருக்கு, 'நிஷான்-இ-பாகிஸ்தான்' என்ற, தங்கள் நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதை வழங்கியது பாகிஸ்தான். வர்த்தகம் மற்றும் பொருளாதார விஷயங்களை தவிர, பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உளவு தகவல் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பாகிஸ்தானும், கத்தாரும் கையெழுத்திட்டன.
கடன் வாங்குவதில் சாதனை
பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) அரசு, பதவியேற்ற வெறும் ஒரு வருடத்தில், வெளிநாட்டு கடன் வாங்கி குவித்ததில், புதிய சா(சோ)தனையை படைக்கப்போகிறதாம். அந்த அளவுக்கு இம்ரான்கான், பல நாடுகளிடமும் நிதி உதவி கேட்டுள்ளார்.
பாதி பட்ஜெட் கடனுக்குத்தானாம்
பாகிஸ்தான் தனது குறுகிய கால கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. தற்போது தனது பட்ஜெட்டில் 41 சதவீதத்தை கடன்கள் சார்ந்த விஷயங்களுக்காக ஒதுக்கி வருகிறது பாகிஸ்தான். அடுத்தடுத்த அரசுகளால் ஏற்றுமதியை அதிகரிக்க இயலாதது, இம்ரான் கானின் முதல் 11 மாத ஆட்சி காலத்தில் ஏற்றுமதி மேலும் 1 சதவீதம் சரிந்தது போன்றவை, அந்த நாட்டு நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.