உலகப் பார்வை: பாகிஸ்தானில் முதல் முறையாக செய்தித் தொகுப்பாளரான திருநங்கை
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
தொகுப்பாளரான திருநங்கை
பாகிஸ்தானில் முதல்முறையாக தொலைக்காட்சி செய்தியை திருநங்கை ஒருவர் தொகுத்து வழங்கியுள்ளார். அவரது பெயர் மாவியா மாலிக். 'கோஹினூர்' என்கிற தனியார் தொலைக்காட்சியில் செய்திகளை வாசித்து வழங்கியுள்ளார்.
இதற்காக பலர் அவரை பாராட்டியுள்ளனர். பாகிஸ்தானில் சமூக அளவில் முத்திரை குத்தப்படுவதை எதிர்கொண்டு வருகின்ற திருநங்கைகள், தங்களின் வாழ்வாதாரத்திற்கான பணத்தை சம்பாதிக்க பிச்சை எடுப்பது, நடனமாடுவது மற்றும் விபச்சாரம் செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள். திருநங்கைகள் தங்களுடைய பாலின அடையாளத்தை முடிவு செய்துகொள்ள அதிகாரம் அளித்து பாகிஸ்தான் செனட் அவை சமீபத்தில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஃபிரான்ஸ் மக்களை நெகிழ வைத்த காவலர்
பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிக்கு பதிலாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த அர்னாட் பெல்ட்ராம் "ஒரு சிறந்த நபர்" என்றும் "விதிவிலக்கான தைரியத்தை" வெளிக்காட்டியதாகவும் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் பாராட்டி இருந்தார்.
அதிபர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஃபிரான்ஸ் மக்களும் அவருக்காக நெகிழ்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஃபிரான்ஸ் வானொலியில் பேசிய அர்னாட்டின் சகோதரர், "அவர் யார் என்றே தெரியாத ஒரு நபருக்காக தன் உயிரை கொடுத்து இருக்கிறார். அது அவரை கதாநாயகன் ஆக்கவில்லை என்றால், வேறு எது ஆக்கும்?" என்கிறார்.
மேலும் படிக்க: பிரான்ஸ்: பிணைக்கைதிக்காக தன்னுயிர் தந்த போலீஸ் அதிகாரி
புவியை காக்க இருளில் மூழ்கிய நகரங்கள்
பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இப்புவியின் முக்கியமான தலங்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை இருளில் மூழ்கும். இப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார முறை 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. இப்போது இதனை 187 நாடுகள் கடைப்பிடிக்கின்றன. சனிக்கிழமை (மார்ச் 24) இரவு உலகெங்கும் முக்கிய தலங்கள் அனைத்திலும் விளக்கு அணைக்கப்பட்டது. இந்தியாவில் இந்தியா கேட் பகுதியில் விளக்குகள் அணைக்கப்பட்டன.
வெளியேறிய கிளர்ச்சியாளர்கள்
டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளில் சிரிய அரசு தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தி வரும் நிலையில், கிழக்கு கூட்டாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து சிரிய கிளர்ச்சியாளர் குழுக்கள் வெளியேறி வருகின்றனர்.கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி நகரமான டூமாவில் இருந்து கிளர்ச்சியாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பலரும் பேருந்துகள் மூலம் சனிக்கிழமையன்று வெளியேறினர்.
அரசு படைகள் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, இந்த வெளியேற்றம் நடைபெற்றது. கிழக்கு கூட்டாவின் சுமார் 70 சதவீத பகுதி தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் படிக்க: சிரியா: வெளியேறிய கிளர்ச்சியாளர்கள்; முன்னேறும் அரசு படைகள்
ஃபின்லாந்திலிருந்து வெளியேறிய பூஜ்டியமோன்
கேட்டலான் பிரிவினைவாத தலைவர் பூஜ்டியமோன் கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக ஃபின்லாந்திலிருந்து வெளியேறினார். பூஜ்டியமோன் ஃபின்லாந்து வந்ததற்கு அடுத்த நாள்(வெள்ளிக்கிழமை) அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியாவை பிரித்து தனி குடியரசை அமைப்பதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பொன்றை இவர் நடத்தினார். இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் தடை செய்து இருந்தது.
பிற செய்திகள்
- துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் பிரம்மாண்ட பேரணி
- 'சால்ட் ஃபிஷ்': அராஃபத்தை கொல்ல இஸ்ரேல் அமைத்த படை
- பாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா? #BBCShe
- இராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சுணக்கத்துடன் செயல்பட்டதா இந்திய அரசு?