இது சரியில்லை.. பாகிஸ்தானுக்கு அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ எச்சரிக்கை
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை கைவிடவேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது .
வாஷிங்டன் : பாகிஸ்தான் அரசு தீவிரவாத நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதை கைவிடவேண்டும் என்று அமெரிக்க உளவுத் துறை அமைப்பான சி.ஐ.ஏ எச்சரித்து உள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருந்து மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சையத் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டான். விசாரணையின் போது, இனியும் ஹஃபீஸை சிறையில் வைத்து இருக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
இதை இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது. சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான ஹஃபீஸ் சையத்தை விடுதலை செய்ததற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரடியாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போல செயல்படுவது நல்லது அல்ல என்று விமர்சித்து இருந்தார்.
இந்த விவகாரத்தில் பதிலளித்த அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஐஸாஸ் அகமது சவுத்ரி, ஹஃபீஸ் சையத்திற்கு எதிரான கூடுதல் ஆதாரங்களை இந்திய அரசு கொடுத்தால் மேல் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்த நிலையில், மீண்டும் அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பாகிஸ்தான் ஆளாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புக் கொள்கையை அறிவித்து பேசிய ட்ரம்ப் தனது உரையில், நாம் பாகிஸ்தானுக்கு பல பொருளாதார உதவிகள் செய்து வருகிறோம். அதே நேரத்தில் பாகிஸ்தான் தனது நாட்டில் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்துவருவது ஏற்புடையதல்ல. இனியும் பாகிஸ்தான் இப்படி செயல்பட்டு வருவதூ ஏற்படுவது அல்ல என்று எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் இயக்குநர் மைக் பாம்பியோ கலிபோர்னியாவில் நடந்த தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நம் எச்சரிக்கைகளை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரித்து வருகிறது. இதை விரைவில் மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால், பாகிஸ்தான் செய்யத்தவறியதை நாங்கள் செய்ய வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.