ஐஎம்எஃப் நிபந்தனையால் பெட்ரோல் விலை ரூ.30 உயரும் அபாயம்.. சிக்கிய பாகிஸ்தான்.. தீர்வு என்ன?
கடும் நிதி நெருக்கடி காரணமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) உதவியை அது நாடியுள்ளது. ஆனால் இதற்கு ஐஎம்எஃப் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. இது கடுமையானதாக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இலங்கையை போலவே பாகிஸ்தானும் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உணவு, மின்சாரம், கேஸ் உள்ளிட்டவைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 240ஆக குறைந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணியும் குறைந்திருக்கிறது. அதேபோல கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நாட்டின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு அரசு பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்தது. மின்சாரத்தை சேமிக்க வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் திருமண மண்டபங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மூடிவிட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இரவு 10 மணிக்கு மேல் எந்த கடைகளும் திறந்திருக்க கூடாது என்று வலியுறுத்தியது. இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வரை சேமிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இப்படி மிச்சம் பிடிக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
மதநிந்தனை.. சொல்லசொல்ல கேட்காத ‛விக்கிப்பீடியா’ முடக்கம்.. பாகிஸ்தான் போட்ட உத்தரவு.. என்னாச்சு?
சிக்கன நடவடிக்கை
அதேபோல சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 10% குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், அமைச்சகங்களின் செலவினங்களை 15% குறைக்கவும், மத்திய/மாநில அமைச்சர்களின் ஆலோசகர்கள் எண்ணிக்கையை 78ல் இருந்து 30 ஆக குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசு 'தேசிய சிக்கனக் குழுவை' கடந்த வாரம் உருவாக்கியுள்ளது. இந்த சிக்கன குழுவானது பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிதியை குறைக்க வலியுறுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும்.
கடன்
இந்நிலையில் மற்றொருபுறம் சர்வதச நாணய நிதியத்திடம் கடனை கோரியிருந்தது. ஆனால் இந்த கடன் குறித்து ஐஎம்எஃப் பரிசீலித்து வருகிறது. இறுதி முடிவு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த கடனுக்கு ஐஎம்எஃப் ஒப்புதல் கொடுத்துவிட்டால் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி வரை கிடைக்கும். இது தற்போதைய நிதி நிலைமையை ஓரளவுக்கு சீராக வைத்திருக்க உதவும். ஆனால், இந்நிதியை பெற சில நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்திருக்கிறது. இந்த நிபந்தனைகள் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டால்தான் முழு பணமும் அரசுக்கு கிடைக்கும். ஆனால் இந்த நிபந்தனைகள் குறித்த அந்நாட்டு அதிபர் ஷெபாஷ் ஷெரிப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதாவது இந்த நிபந்தனைகளை பின்பற்றினால் பெட்ரோல் விலை உயரும்.
விலையுயர்வு
தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.50ஆக இருக்கிறது. ஐஎம்எஃபின் நிபந்தனையை அமல்படுத்தினால் பெட்ரோல் விலை ரூ.80ஆக அதிகரிக்கும். அதேபோல பெட்ரோலியம் மற்றும் இதர எண்ணெய் பொருட்களுக்கான வரியை 17 சதவிகிதம் வரை உயர்த்தவும் ஐஎம்எஃப் பரிந்துரைத்துள்ளது. குளிர்பானங்கள் மீதான வரியும் 13 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாக உயர்த்தவும் சிகரெட் மீதும் வரி அதிகரிக்கவும் ஐஎம்எஃப் பரிந்துரைக்கிறது. இவற்றை சுட்டிக்காட்டியுள்ள அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்த நிபந்தனைகளை அமல்படுத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.
போட்டி மாற்றம்
தற்போது அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.09 பில்லியன் டாலராக இருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். இந்த நெருக்கடி காரணமாக பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.