அபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு!
இஸ்லாமாபாத்: குறிப்பட்ட நபர்களை கிண்டலடித்தோ, நையாண்டி செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.
இதில் உலகக்கோப்பை போட்டித் தொடர் என்பதால் பரபரப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்தியாவை வெறுப்பேற்றும் வகையில் பாகிஸ்தான் ஊடகங்கள் அண்மையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டன.
டீ கப்பை கொடுத்து கேள்வி
அதில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது அந்த விளம்பரம். அதில் அபிநந்தனை போன்று மீசை வைத்த ஒருவரை, இந்தியாவின் நீல நிற கிரிக்கெட் ஜெர்சி அணிய வைத்து கையில் டீ கப்பை கொடுத்து சில கிரிக்கெட் தொடர்பான சில கேள்விகள் கேட்கப்பட்டன.
அதே பதில்
பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா டாஸ் வெல்லுமா என கேட்கிறது. அதற்கு அபிநந்தனை போல் உள்ள ஒருவர், மன்னிக்கவும், உங்களது இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றார். இதுபோன்ற மற்றொரு கேள்விக்கும் அந்த நபர் அதே பதிலை கூறினார்.
பாகிஸ்தானுக்கு கண்டனம்
பின்னர் டீ எப்படி உள்ளது என கேட்க, சூப்பர் என கூறி கிளம்பும் போது கப் எங்களுக்கு என வாங்கிக்கொள்கின்றனர். இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், விங் கமாண்டர் அபிநந்தனை கிண்டலடிக்கும் வகையில் வெளியிட்ட பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஊடங்களுக்கு உத்தரவு
இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்ட நபர்களின் மேல் வெறுப்பு உண்டாக்கும் வகையிலோ அல்லது கேலி செய்யும் விதத்திலோ, அரசியல் கட்சிகளை கிண்டல் செய்தோ, அர்த்தமற்ற நையாண்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மீம்ஸ் போடும்போது கவனம்
மேலும் விளம்பரங்கள் மீம் போன்ற விஷயங்களை ஒளிபரப்பும்போது ஊடகங்கள் கவனத்துடன் செயல்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.