உலகை உலுக்கிய பெஷாவர் பள்ளித் தாக்குதல் நாள்.... இன்றும் பாக்.-ல் 8 பேருக்கு தூக்கு!
பாகிஸ்தான்: உலகை உலுக்கிய பெஷாவர் பள்ளிகூடத் தாக்குதல் நாளை அனுசரித்த பாகிஸ்தான் இன்றும் வெவ்வேறு சிறைகளில் இருந்த 8 குற்றவாளிகளைத் தூக்கிலிட்டது.
பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக பலி கொள்ளப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதிகளை கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்த பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தியது. அதாவது தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடையோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்து அதிரடியாக நடைமுறைப்படுத்தவும் தொடங்கியது. இதுவரையில் மொத்தம் 310 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், தூக்குத் தண்டனையை கைவிட வேண்டும் என்று ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன், அம்னெஸ்டி அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு அதன் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று பெஷாவர் பள்ளி கூட தாக்குதல் நாள் இன்று பாகிஸ்தானில் பல பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதேநேரத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வெவ்வேறு சிறைகளில் இருந்த 8 பேரை இன்று தூக்கிலிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெஷாவர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய கைதிகளுக்கு மட்டுமே மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது. தற்போது அதனை மீறி மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.