எல்லையில் நிரந்தர சுவர்: இந்தியா தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது- பாக். கண்டனம்
இஸ்லாமாபாத்: இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிரந்தர எல்லைச் சுவர் கட்டும் இந்தியாவின் திட்டம் பற்றி தங்களுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்றும், இந்த விஷயத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது எனவும் பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், எல்லைப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் பெருமளவில் பாதிக்கப் படுகின்றனர். அவர்கள் விவசாயமும் செய்ய முடியாமல் அல்லாடுகின்றனர்.
எனவே, பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் எல்லையில் நிரந்தர சுவர் கட்ட பரிந்துரைக்க திட்டமிட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது குறித்தான செய்தி, பாகிஸ்தான் வானொலியிலும் ஒலிபரப்பானது.
இந்நிலையில், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சுவர் கட்டுவது குறித்து இந்தியா சார்பில் தங்களுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், இது குறித்து பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியிருப்பதாவது:-
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பெர்லின் சுவர் போன்று சுவர் கட்டுவதாக கூறப்படும் திட்டம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எந்த தகவலும் வரவில்லை. எல்லையில் நிரந்தர சுவர் கட்டும் விஷயத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல், பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் எதிர்விளைவுகளை நிரூபித்துள்ளனர். இந்த ஆண்டு ஆளில்லா விமான தாக்குதல் குறைந்தபோதிலும், அத்தகைய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது. இதுதொடர்பாக ஒவ்வொரு சர்வதேச மாநாட்டிலும் பாகிஸ்தான் தீவிரமாக பிரச்சினை எழுப்பியிருக்கிறது.
பாகிஸ்தான்-ஈரான் எரிவாயு குழாய் திட்டம் தொடர்பாக இரு நாடுகளும் 3 தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது முடிந்தபிறகு அமைச்சக மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.