வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது
கராச்சி: தங்கள் நாட்டின் வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தானுக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தாக்குதல் நடத்தியது. இதில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படையின், போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, பாலக்கோட்டில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களை தகர்த்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள, 11 வான்வெளிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள், நீண்ட துாரம் சுற்றிச் சென்றன. இதனால் ஏர் இந்தியாவுக்கு ரூ.491 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நான்கரை மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 16-ந் தேதி அதிகாலை வான்வெளி பாதைகள் திறக்கப்பட்டன.
இது தொடர்பாக, கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அமைச்சர், குல்காம் சர்வார் கான்,''வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறைக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இழப்பு என்றார். ஆனால், இந்தியாவுக்கு, இதைவிட இருமடங்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும். இதுபோன்ற தருணங்களை தடுக்க, இணக்கமாக நடந்து கொள்வது இரு நாடுகளுக்கும் அவசியம் என்றும் அவர் கூறினார்.