பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: நார்வே, பிலிப்பைன்ஸ் தூதர்கள் உள்பட 6 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கில்கிட் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நார்வே, பிலிப்பைன்ஸ் நாட்டு தூதர்கள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் கில்கிட் பகுதியில் உள்ள நால்டர் பள்ளத்தாக்கில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது. 11 வெளிநாட்டவர்கள் மற்றும் 6 பாகிஸ்தானியர்கள் இருந்த அந்த ஹெலிகாப்டர் திடீர் என்று பள்ளிக் கட்டிடம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பாகிஸ்தானுக்கான நார்வே தூதர் லீப் ஹெச் லார்சன், பிலிப்பைன்ஸ் தூதர் டோமிங்கோ டி லூசினாரியோ ஜூனியர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தூதர்களின் மனைவிகள், இரண்டு ராணுவ விமானிகள் என மொத்தம் 6 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்தில் போலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் சலீம் பஜ்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கில்கிட் பால்திஸ்தான் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நவாஸ் ஷரீப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 3 எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்களில் சிலர் சென்றனர். அதில் 2 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கிவிட்டன. ஒரு ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளாகிவிட்டது. விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை என்றார்.
கில்கிட் பகுதியில் இரண்டு திட்டங்களை துவக்கி வைக்கவிருந்தார் ஷரீப். ஆனால் அவரது விமானம் கில்கிட் வந்து கொண்டிருக்கையில் ஹெலிகாப்டர் விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் அது இஸ்லாமாபாத்திற்கு திரும்பிச் சென்று பத்திரமாக தரையிறங்கியது.