7 ஆண்டுகளுக்குப் பின் பாக். குடியரசு தின விழா- முப்படைகளின் மிரட்டலான அணிவகுப்பு!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தமது நாட்டின் குடியரசு தினத்தை உற்சாகமாக கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் முப்படை அணிவகுப்பு நடைபெற்றது.
1940ஆம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி இஸ்லாமியருக்கு தனிநாடு கோரி முதல் புரட்சி நடைபெற்றது. இந்நாளையே பாகிஸ்தானின் தேசிய நாள் அல்லது குடியரசு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் கடந்த 2008ஆம் ஆண்டுதான் கடைசியாக இந்த குடியரசு தின விழா நடத்தப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்ச்சிகள் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. இதற்கு முன்னர் நாடாளுமன்ற வளாகம் முன்னர் உள்ள அணிவகுப்பு மைதானம் அல்லது ராவல்பிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இம்முறையோ புதியதாக கட்டப்பட்ட அணிவகுப்பு மரியாதையில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன், பிரதமர் நவாஸ் ஷெரீப், முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன. இதில் பாகிஸ்தானின் ராணுவ பலத்தை வெளிப்படுத்தும் விதமாக ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.