கராச்சியில் பயங்கர விபத்து.. 107 பேருடன் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்.. ஷாக்
கராச்சி: பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் பயணித்த விமானம், கராச்சியின் குடியிருப்பு பகுதியில், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Recommended Video
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், லாகூர் நகரில் இருந்து வர்த்தக தலைநகரான கராச்சிக்கு இயக்கப்பட்டது. இதில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் இருந்தனர். ஆகமொத்தம் விமானத்தில் மொத்தம் 107 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
கராச்சியில் விமானம் தரையிறங்க முயன்றபோது, குடியிருப்பு காலனிப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளனர்.
வீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்
புகை மூட்டம்
இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. குடியிருப்பில் விழுந்ததால் அங்கிருந்த மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானம் விழுந்த இடத்தில் இருந்து பெரும் கருமையான புகைமூட்டம் எழுவதை பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்க முடிகிறது.
பேசிய பைலட்
தகவல் அறிந்ததும், கராச்சிக்கு கிளம்பினார், பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விபத்துக்கு முன்பாக, விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். விமானத்தில், தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். இரண்டு ஓடுபாதைகள் தரையிறங்க தயாராக இருந்தாலும், தரையிறங்குவதைவிட பறப்பதே சிறந்தது என நினைப்பதாகவும் பைலட் கூறியிருந்தார். இந்த நிலையில்தான், பைலட் கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு அர்ஷத் மாலிக் தெரிவித்தார்.
மக்கள்
சிந்து மாகாண ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் கூறுகையில், விமானம் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் விழுந்துள்ளது. இப்போதைய கவலை இப்பகுதியில் உள்ள மக்களின் உயிரிழப்பு பற்றியதுதான். ரேஞ்சர்ஸ் மற்றும் மீட்பு சேவை பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனனர். முடிந்தவரை பல உயிர்களை காப்பாற்ற முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தார்.
இம்ரான் கான்
நெரிசலான குடியிருப்பு பகுதிக்குள் விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து புகை மூட்டம் கிளம்புவதை போட்டோக்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட ட்வீட்டில், விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். உடனடி விசாரணை தொடங்கப்படும். இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.