வியட்நாம் முதலிடம்.. சீனாவுக்கு அடுத்து பாகிஸ்தான்.. அச்சமூட்டும் ஆய்வு அறிக்கை
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இணைய சுதந்திரம் மிகவும் மோசமாக உள்ளதாக சர்வதேச அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 9வது ஆண்டாக, பாகிஸ்தானின் இணைய சுதந்திரம் படுமோசமாக உள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்படுவதாக தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு இணையத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் கிடைப்பதில்லை என்கிறது இந்த அறிக்கை.
தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்த பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்று வருகிறது. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் ஒருபடி கீழே பாகிஸ்தான் இறங்கியுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டையே உலுக்கிய கோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு.. மனோகரனுக்கு தூக்கு உறுதி! உச்சநீதிமன்றம் அதிரடி
இணைய சுதந்திரம் இல்லை
பாகிஸ்தான் மக்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதாகவும், அங்கு ஆன்லைன் மூலமாக சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிப்பவர்கள் அச்சுறுத்த அல்லது கொல்லப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளின் இணைய சுதந்திரம் குறித்து ஃப்ரீடம் ஹவுஸ் என்ற சர்வதேச அமைப்பு இந்த ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பல்வேறு விதிமீறல்
கடந்த ஆண்டு 100 நாடுகளில் 27வது இடத்தை பிடித்திருந்த பாகிஸ்தான் தற்போது ஒருபடி கீழிறங்கி 26வது இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டைக் காட்டிலும் பாகிஸ்தானில் தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம், சீனாவிற்கு அடுத்த இடம்
உலகெங்கிலும் இணையம் மற்றும் டிஜிட்டல் ஊடக சுதந்திரத்தில் மிகவும் மோசமாக செயல்பட்டுவரும் 10 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் வியட்நாம் மற்றும் சீனாவிற்கு அடுத்த இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது. பாகிஸ்தானில் அரசு மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து ஆன்லைனில் விமர்சனம் செய்தால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதுடன், பல்வேறு தாக்குதல்களும் படுகொலைகளும் நிகழ்த்தப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கருத்து சுதந்திரம் மறுப்பு
பாகிஸ்தானில் தற்போதுவரை சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட்ட 8 லட்சம் வெப்சைட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப ஆணையம் தொடர்ந்து சுதந்திர கருத்துக்கள் பதிவிடுவதை தடுத்து வருவதாகவும் அறிக்கை முடிவுகள் கூறுகின்றன.
மதம் உள்ளிட்ட கருத்துகள்
மதம், ராணுவ நடவடிக்கைகள், பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து கருத்துக்கூற விழையும் விமர்சகர்கள், அரசின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பயந்து, தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளியிட தயக்கம் காட்டுவதாகவும் அறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.