பாகிஸ்தானில் இடித்து தீ வைத்து எரிக்கப்பட்ட இந்துக் கோயில்.. மீண்டும் கட்டித்தரப்படும்.. மாகாண அரசு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், கைபர் பக்துங்வா (khyber pakhtunkhwa) மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் இடித்த தள்ளப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட கோவில் மீண்டும் கட்டித்தரப்படும் என்று பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாண அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், கைபர் பக்துங்வா (khyber pakhtunkhwa) மாகாணத்துக்கு உட்பட்ட பகுதி கராக். இங்கு இந்துமதத் துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியுடன்கோயில் ஒன்று உள்ளது. கடந்த 1919-ம் ஆண்டு, பரமஹன்ஸ் மகராஜ் இறந்த போது, எரியூட்டப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டப்பட்டது. அந்த இடத்தில், அவரது பக்தர்கள் பல ஆண்டுகளாக கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
அந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதி பாகிஸ்தான் அரசின் அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகும். இந்தக் கோயிலுக்கு கராக் பகுதியில் உள்ள தெர்ரி கிராமத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கடந்த 1997-ம் ஆண்டு பரமஹன்ஸ் மகராஜ் சமாதி தாக்கப்பட்டது. சமாதியை புணரமைக்க இந்துக்கள் முயன்ற போது அந்த ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர், அதை கைப்பற்றிக் கொண்டார்.
மீண்டும் கோவில்
அதையடுத்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கைபர் பக்தூங்வா மாகாண அரசு, பரமஹன்ஸ் மகராஜின் சமாதியை மீண்டும் கட்டிக் கொடுத்தது இதனால் தெர்ரி கிராமத்தில் இந்து - முஸ்லிம்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்து கோயில் இடிப்பு
இதனால் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அந்த கிராமத்தில் வாழும் ஜாமியாத் உலாமா - இ - இஸ்லாம் என்ற மத அடிப்படைவாதக் கட்சி ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் கோயிலை இடித்துத் தள்ளினார்கள். அத்துடன் கோயிலை தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
350 பேர் மீது வழக்கு
சர்வதேச அளவில் பிரச்சனை வெடித்த நிலையில் உடனடியா விரைந்து செயல்பட்ட கைபர் பக்துங்வா போலீஸ் கோயில் இடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது தொடர்பாக 26-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது மேலும் பலரை தொடர்ந்து தேடி வருகிறது. எஃப்.ஐ.ஆரில் 350 க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்று மாகாண காவல்துறைத் தலைவர் கே.பி.கே. சனாவுல்லா அப்பாஸி தெரிவித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எஃப்.ஐ.ஆரில் தீவிரவாதம் தொடர்பான சட்டத்தின் அனைத்து பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது என்றார்.
மீண்டும் கோயில்
கைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் இச்சம்பவம் பற்றி கூறுகையில், இந்து கோவில் தாமதமின்றி புனரமைக்கப்படுவதை எனது அரசாங்கம் உறுதி செய்யும் என்றார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கம்
மத விவகாரங்களுக்கான பாகிஸ்தான் அமைச்சர் நூருல் ஹக் காத்ரி,இச்சம்பவம் பற்றி கூறுகையில் ``கோயில் மீதான தாக்குதல் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கான சதியாகும். சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிறுபான்மையாக உள்ளவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாப்பது மத அடிப்படையிலும் தார்மீக, அரசியல் சாசன அடிப்படையிலும் நமது தேசிய கடமை'' என்றார.