சிவசேனாவை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவிக்க பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இஸ்லாமாபாத்: சிவசேனா கட்சியை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்கள், நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வருவதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாராஷ்டிராவில் அண்மையில் நடக்க இருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சி ரத்தானது.
பின்னர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை மும்பையில் வெளியிட ஏற்பாடுகளை செய்த பாஜக தலைவர்களில் ஒருவரான சுதீந்திரா குல்கர்னியின் மீது சிவசேனா அமைப்பினர் கருப்பு மை ஊற்றினர்.
இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட சிவசேனா கட்சியினர் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் கலந்துகொள்ள இருந்த பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து வந்தததால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், சிவசேனா கட்சியை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.
சிவசேனா கட்சிக்கு தடைவிதிக்க கோரியும் வலியுறுத்தியுள்ளன. மேலும், சிவசேனா கட்சியினர் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை நசுக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தை உலக அளவில் எடுத்துச் சென்று, சிவசேனாவை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டுள்ளது.