இந்த இரு மாதங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே முழுமையான போர் நடக்கும்.. பாக். அமைச்சர் பகீர் பேட்டி
Recommended Video
ராவல்பிண்டி: இந்தியா பாகிஸ்தான் நடுவே முழுமையான போர் நடைபெற உள்ளதாகவும், அது எந்த மாதத்தில் நடைபெறும் என்றும், ஆரூடம் கூறி, கிலி ஏற்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் மத்திய ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, பாகிஸ்தான் கடும் கோபத்தில் உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள், இந்த விஷயத்தில் இந்தியா பக்கம் உள்ளன.
இந்தியாவை அடிபணிய வைக்க, போர் என்ற கோஷத்தை கையில் எடுத்துள்ளது பாகிஸ்தான். சில தினங்கள் முன்பாக, காஷ்மீர் நிலைமை குறித்து பாகிஸ்தான் டிவி சேனல்களில் நேரலையாக உரையாற்றிய அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் எந்த அளவிற்கும் செல்லும் என்று கூறினார்.
|
நேரம் வந்துவிட்டது
இந்த நிலையில், அமைச்சர் ஷேக் ரஷீத் ராவல்பிண்டியில் இன்று அளித்த பேட்டி: அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் நடைபெறப்போகிறது. "காஷ்மீரின் இறுதி சுதந்திர போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது" என்று உணர்ச்சி பொங்க கூறினார். இந்தியாவுடனான உடனடி யுத்தம் "கடைசியாக இருக்கும்" என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
போர் ஆமா போர்
மேலும் அவர் கூறியதாவது: காட்டுமிராண்டித்தனம் மற்றும் பாசிசம் நரேந்திர மோடியால் கட்டவிழ்க்கப்படுகிறது. காஷ்மீர் அழிவின் விளிம்பில் உள்ளது. மோடிக்கு முன்னால் பாகிஸ்தான் மட்டுமே தடையாக எதிர்த்து நிற்கிறது. இந்த விவகாரத்தில் மற்ற முஸ்லிம் உலகம் ஏன் அமைதியாக இருக்கிறது?
ஐநா சரியில்லை
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக இருக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி) காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. பாகிஸ்தான், இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளத்தாக்கு மக்களுடன் நிற்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
சீனாவுக்கு புகழாரம்
பிரதமர் இம்ரான் கான் செப்டம்பர் மாதம் மீண்டும் ஐ.நா பொதுச் சபைக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வார். சீனாவைப் போன்ற ஒரு நண்பர் இதை ஆதரிப்பதில் பாகிஸ்தான் மகிழ்ச்சியடைகிறது. செப்டம்பர் 27 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் இம்ரான் கான் ஆற்றப்போகும் உரை முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா போன்ற ஒரு நண்பர் எங்களுடன் நிற்பது எங்களுக்கு அதிர்ஷ்டம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராஜாங்க உறவுகள்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய எடுத்த முடிவு தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுடனான தனது ராஜாங்க உறவுகளை குறைத்துக் கொண்டு, அதன் வான்வெளி போக்குவரத்தை ஓரளவு மூடியுள்ளது பாகிஸ்தான் என்பது நினைவிருக்கலாம்.