பாக்: பஞ்சாப் மாகாண அமைச்சர் அலுவலகத்தில் மனித குண்டு தாக்குதல்.. அமைச்சர் உட்பட 8 பேர் பலி
லாகூர்: பாகிஸ்தானில் இன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் அந்நாட்டின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் சுஜா கான்ஜாதா. இவரது அலுவலகம் அட்டோக் அருகில் உள்ள ஷாதிகான் என்ற இடத்தில் உள்ளது. இன்று மதியம் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் மனித வெடிகுண்டாக மாறி வெடித்தார். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததில் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் அமைச்சர் சுஜா கான்ஜாதா உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 25 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கிடைத்துள்ள ஆதாரங்களில் இருந்து இந்த தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளனர்.
கான்ஜாதா, பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலுக்கு பக்கபலமாக நின்றவர் என்றும், உதவிகளையும், உத்தரவுகளையும் வழங்கியவர் என்றும், அதனாலேயே இந்தத் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.