புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தவில்லை.. நான் அப்படி பேசவில்லை.. பாக். அமைச்சர் பல்டி
இஸ்லாமாபாத்: தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை என்று அந்த நாட்டு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்தார், புல்வாமா தாக்குதல் குறித்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் பல்டி அடித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பவாத் சவுத்ரி பேசுகையில், நாம் அவர்களின் வீட்டுக்குள் போய் இந்தியாவைத் தாக்கினோம். புல்வாமாவில் நமது வெற்றி, இம்ரான் கான் தலைமையில் மக்களின் வெற்றி. நீங்களும் நாங்கள் அனைவரும் அந்த வெற்றியின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.
புல்வாமாவில் கடந்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி துணை ராணுவ படையினர் சென்ற வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இதிலல் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இதை பாகிஸ்தான் நடத்தியது போல பவாத் சவுத்ரி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில்தான், இந்திய ஊடகங்களுக்கு பவத் சவுத்ரி பிரத்யேக பேட்டிகளை அளித்து, தான் அப்படி சொல்லவில்லை, அப்படி சொல்லவில்லை என குமுற ஆரம்பித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாலகோட் பகுதிக்குள், இந்தியா புகுந்ததால், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது. எங்கள் போர் விமானங்கள் இந்திய எல்லையை நோக்கி சிறிப் பாய்ந்தன. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத்தான் நான் பாராட்டி பேசினேன். புல்வாமா தாக்குதலை பாராட்டவில்லை. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்காது என்றார்.