பாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி
Recommended Video
பிஷ்கேக்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் கைவிட்டால்தான், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு, அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு தலைநகர், பிஷ்கேக் சென்றுள்ளார். அங்கு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை சந்தித்து பேசினார் மோடி. சுமார் 20 நிமிடங்கள் இந்த உரையாடல் நீடித்தது.
இப்போதுள்ள, தீவிரவாத சூழ்நிலையில் இருந்து பாகிஸ்தான் வெளியே வரவேண்டும். ஆனால் இப்போதைய நிலையில், அப்படி எந்த ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. பாகிஸ்தான் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று மோடி அப்போது சீன அதிபரிடம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இந்த தகவலை கூறினார்.
சீனாவைப் பொறுத்தளவில் பாகிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளில், சீனா பெரும் முதலீடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் இதே உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்ற போதிலும், மோடி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்திய நிலைப்பாட்டை, சீன அதிபர் வாயிலாக பாகிஸ்தானுக்கு கடத்தியுள்ளார் மோடி.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் மோடிக்கும், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி, காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபரிடம் தெரிவித்துள்ள தீவிரவாதம் தொடர்பான இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதன் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தரப்பு தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட வேண்டும் என்று இந்திய தரப்பில் முன்வைத்த கோரிக்கைக்கு சீனாவும் ஆதரவு அளித்து திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.