காமன்வெல்த் நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் மாநாடு ரத்து... இந்தியாவின் எதிர்ப்பால் பாகிஸ்தான் முடிவு
இஸ்லமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த காமல்வெல்த் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில், செப்டம்பர் 30-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் 61-வது மாநாடு நடைபெறுவதாக இருந்தது.
அதில் பங்கேற்குமாறு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் சபாநாயகர்களுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநில சபாநாயகருக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை.
இதற்கு விளக்கமளித்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், ஜம்முகாஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதால், அம்மாநில சட்டமன்றத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, ஜம்மு காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பு விடுவிக்கவில்லையென்றால் மாநாட்டை புறக்கணிக்கபோவதாக அறிவித்து இருந்தது.
எனினும் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றால் கவலைப்படபோவதில்லை என்றும், மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது.
மேலும் இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத பாகிஸ்தான், காஷ்மீர் சபாநாயகரை அழைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்த நிலையில், காமன்வெல்த் நாட்டின் அவைத்தலைவர்கள் மாநாட்டை பாகிஸ்தான் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பு விடுப்பது தொடர்பான பிரச்சினையில் இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் மாநாடை நடத்த பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு பின்னர் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.