"காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு"...இதைச் சொல்லாமல் பாகிஸ்தான் சுதந்திர தின விழா முடியாதே!
இஸ்லாமாபாத்: பதற்றத்தை நீக்கி காஷ்மீர் பிரச்சினையில் நேர்மையுடன், அமைதியான தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் சுத்ந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
நாளை இந்தியா தனது 68வது சுதந்திர தினத்தைக் கொண்டா உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாவது:-
புதிய வழிகளில்...
இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு புதிய வழிகளை ஆராய்ந்து அமைதியான தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.
அமைதித் தீர்வு...
முக்கிய பதற்றத்தை நீக்குவதன் மூலம் நாங்கள் காஷ்மீருக்கு முழு நேர்மையுடன் அமைதியான தீர்வு காண வேண்டுகிறோம். பாகிஸ்தானும் இந்தியாவும் புதிய வழிகளில் தங்களது உறவுகளை மேம்படுத்த வேண்டும்.
வெளியுறவுக் கொள்கை...
இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத போரில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் மீது தொடர்ந்து குற்றம் சுமத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான சமரசத்தை பாதிக்கும். அண்டை நாடுகளுடன் சமாதான உறவுகளை மேற்கொள்வது எங்களது வெளியுறவு கொள்கையின் அடிப்படை நோக்கமாகும்.
அமைதிஅயை விரும்புகிறோம்...
நமது நாடு அமைதியான நாடு, நாட்டில் சமாதான முயற்சியை மேற்கொள்வோம்,மேலும் எங்கள் எல்லையில் நீடித்த அமைதியை விரும்புகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அழைப்பு...
மேலும், தனது பேச்சினூடே ‘நீடித்த மற்றும் நிரந்தரமான அமைதிக்கு வாருங்கள் அப்போது தான் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்து முன்னேற்றத்தின் உச்சியை தொடமுடியும்' என ஆப்கானிஸ்தானுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
வாகா எல்லையில் இனிப்பு
இதற்கிடையே, பாகிஸ்தானின் 68வது சுதந்திர தினத்தையொட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான வாகா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினருக்கு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகளை வழங்கி வாழ்த்தினர்.
முன்னதாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கொடியேற்றி பேசினார்.