இந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு இம்ரான் கான் கடும் கண்டனம்
இஸ்லாமாபாத்: முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் இந்தியா வந்த முஸ்லீம் அல்லாத இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் உள்பட 6 சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 311 எம்பிக்கள் ஆதரவும் 80 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த மசோதா நிறைவேறிய உடனேயே நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
அமித் ஷாவிற்கு தடையா? நீங்கள் செய்வது தவறு.. அமெரிக்கா ஆணையத்திற்கு மத்திய அரசு பதிலடி!
பாகிஸ்தான் கண்டனம்
அந்த அறிக்கையில், அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரத்தில் தலையிடும் வகையில் தவறான, நல்லெண்ணமற்ற நோக்கத்தோடு குடியுரிமை திருத்த மசோதாவை இந்தியா கொண்டு வந்திருப்பதாக பாகிஸ்தான் தனது அறிக்கையில் கண்டித்துள்ளது.
இந்துத்துவா
இந்திய அரசு நிறைவேற்றியுள்ள பிற்போக்குத்தனமான, பாகுபாடுகளை உருவாக்கும் குடியுரிமைத் திருத்த மசோதாவை கண்டிப்பதாகவும், இந்த மசோதாவை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தீவிரமான இந்துத்துவா சித்தாந்தங்கள் மற்றும் மதரீதியான மேலாதிக்க சிந்தனைகளுடன் இந்த மசோதா உள்ளதாகவும் பாகிஸ்தான் கடுமையாக விமர்சித்துள்ளது.
மனித உரிமை விதிகள்
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மசோதா பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களையும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், விதிகளையும் மீறுகிறது என்று விமர்சித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ்
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினை தாக்கியுள்ள இம்ரான்கான், இந்திய குடியுரிமை திருத்த மசோதா, ஆர்எஸ்எஸ் இந்துராஷ்டிராவின் விஸ்தரிப்பு வடிவத்தின் ஒருபகுதி" என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு சவால்
இதனிடையே குடியுரிமை திருத்த மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் நிறைவேற்றுவது நிச்சயம் பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என தெரிகிறது. லோக்சபாவில் ஆதரித்த சிவசேனா நிபந்தனை விதித்துள்ளது.