இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுப்போம்.. மிரட்டும் பாகிஸ்தான்!
இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
Recommended Video
இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது.
முதல்வருடன் சந்திப்பு
இதையடுத்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை சந்தித்து பேசினார்.
தவறுக்கு விலை கொடுக்கும்
இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பாகும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டும். பாகிஸ்தான் தன்னுடைய தவறுக்கு விலைகொடுக்கும் என்றார்.
விரிவான ஆய்வு
ராணுவத்துடன் இந்திய அரசு துணை நிற்கிறது என்றும் எல்லைப் பிராந்தியங்கள் தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொள்கிறோம் என்றும் அவர் கூறினார். மேலும் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
தக்க பதிலடி கொடுக்கப்படும்
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் எச்சரிக்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குர்ராம் டஸ்ட்கிர் கான் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தயாராக உள்ளோம்
பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் நாட்டை பாதுகாக்க எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இதனால் இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.