அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாக். ரெடி: ஹபீஸ் சயீத்
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக 26/11 மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி ஹபீஸ் சயீத் எச்சரித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜமாதுத்தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சயீத் கூறுகையில்,
இந்தியா ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானை தாக்கினால் அந்த நாட்டையே அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள 10 கிராமங்களுக்கு சென்ற ஹபீஸ் சயீத் அங்குள்ள மக்களின் உணர்ச்சிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். ஜமாதுத்தவா ஒரு தீவிரவாத அமைப்பு என்றும், ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதி என்றும் ஐ.நா. கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சயீத் தனது அமைப்பை சேர்ந்த பல தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.