என்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்!
இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இந்தியாவின் மற்ற மாநிலங்களைப்போல் ஒரு மாநிலமாக மாறி நாளையுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது இந்நிலையில் ஒராண்டு நாளை இந்தியா கொண்டாட உள்ள வேளையில், அதறகு ஒரு நாள் முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆகஸ்ட் 4ம் தேதியான இன்று, காஷ்மீர் மற்றும் குஜராத்தின் ஜுனகத் பகுதி முழுவதையும் உள்ளடக்கிய பாகிஸ்தான் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசன பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதன் மூலம் நாட்டின் அமல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் அனைத்து விஷயங்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் பொருந்தும். இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த எவரும் இடம் வாங்க முடியும். இனி அங்கு தொழில் வளம் பெருகும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.
மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த கையோடு, இன்னொரு விஷயத்தையும் செய்தது. அதாவது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு சட்டசபை உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆர்வம் காட்டாத சீனா
இந்திய அரசின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கடந்த ஆண்டு பல்வேறு வழிகளில் போர் மிரட்டல் விடுத்தது. ஐநா சபையிலேயே அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் இந்தியாவுக்கு அணு ஆயுத போர் மிரட்டல் விடுத்தார். அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்கு, மலேசியா, சீனா, துருக்கி உள்ளிட்ட சில நாடுகளே ஆதரவு தெரிவித்தன. சீனா கூட பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானால் காஷ்மீர் பிரச்சனை பெரிய அளவில் எடுத்து செல்ல முடியவில்லை.
வரைபடம் வெளியீடு
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளதை அடுத்து இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடாவடியாக புதிய மேப் வெளியிட்டுள்ளார். காஷ்மீர் மற்றும் குஜராத்தின் ஜுனகத் பகுதி முழுவதையும் உள்ளடக்கிய பாகிஸ்தான் நாட்டின் புதிய வரைபடத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் வரைபடம்
இது தொடர்பாக பிரதமர் இம்ரான்கான் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றுகையில். "இன்று, பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை உலகிற்கு முன் அறிமுகப்படுத்துகிறோம். இந்த புதிய வரைபடத்தை பாகிஸ்தானின் அமைச்சரவை, எதிர்க்கட்சி மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைபடம் பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது. இந்த வரைபடம் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மக்களின் நிறைவேறாத விருப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. இந்த வரைபடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்த சட்டவிரோத நடவடிக்கையை ரத்து செய்கிறது (சிறப்பு அந்தஸ்து 370 ஐ ரத்து செய்தல்). இன்று முதல், இது பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ வரைபடமாக இருக்கும், " இவ்வாறு கூறினார்.
குரேஷி சவால்
இம்ரான் கான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, காஷ்மீர் மற்றும் அதன் மக்கள் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை இந்த வரைபடம் சவால் செய்கிறது. இந்த வரைபடம் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இதுவரை மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் மட்டுமே பேசப்பட்டது. இன்று, எங்கள் அரசாங்கம் அந்த வரைபடத்தை முழு உலகிற்கும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வரைபடத்தில் காஷ்மீர், ஆசாத் காஷ்மீர், கில்கிட் பால்டிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் மக்கள் தீர்க்கப்பட விரும்பும் விஷயங்கள் சர்ச்சைக்குரியவையாகக் கருதப்படுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்தியா ஒரு வரைபடத்தை வெளியிட்டு கேலி செய்தது. ஆனால் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள இந்த வரைபடம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுக்கும்.
காஷ்மீருக்கு ஆதரவு
"சர்ச்சைக்குரிய பிரதேசத்தை" குறிக்கப் பயன்படுத்தப்படும் ஆரம்ப வரைபடத்தில் புள்ளியிடப்பட்ட லைன் அகற்றப்பட்டுள்ளது. புதிய வரைபடத்தில் சியாச்சினும் சேர்க்கப்பட்டுள்ளது. அது எப்போதும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு "காஷ்மீர் தலைமை" வரைபடத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது . இந்த வரைபடம் இந்தியாவுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது, இது காஷ்மீரின் நிராயுதபாணியான தியாகம் செய்யும் இளைஞர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது, பாகிஸ்தான் காஷ்மீர் மக்களுடன் நிற்கிறது" இவ்வாறு குரேஷி கூறினார்.