ஜமாத் உத் தவாவை தடை செய்துட்டோம்.. முடக்கிட்டோம்.. சொல்கிறது பாக்.. நம்பிட்டோம்ணே!
இஸ்லாமாபாத்: இந்தியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக திகழும் ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத் உத் தவா அமைப்பை தடை செய்து அதன் அறக்கட்டறை பிரிவையும் முடக்கி விட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இது வெறும் கண்துடைப்பு என்பது பாகிஸ்தானுக்கே நன்றாக தெரியும் என்பதால் இதை நம்ப இந்தியா தயாராக இல்லை.
ஏற்கனவே இந்த அமைப்பு பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தது. ஒவ்வொரு முறையும் இந்தியாவிடமிருந்து நெருக்கடி வரும்போதெல்லாம் அதை பாகிஸ்தான் தடை செய்வது போல நடிக்கும். அந்த அமைப்பும் வேறு பெயருக்கு மாறி வழக்கம் போல செயல்படும்.
அந்த வகையில் இப்போது காஷ்மீரில் நடந்துள்ள கொடிய பயங்கரவாத தாக்குல் சம்பவத்திற்குப் பிறகு ஜமாத் உத் தவா அமைப்பையும் அதன் அறக்கட்டளையான பாலா இ இன்சானியாத் பவுண்டேஷனையும் தடை செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது உலக அளவில் எழுந்துள்ள கடும் எதிர்ப்புகளைத் தணிக்கும் வகையிலான கண் துடைப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். இரு அமைப்புகளையும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹபீஸ் சயீத் ஒரு கில்லாடி தீவிரவாத தலைவர் ஆவார். இந்தியாவில் தீவீரவாத செயல்களுக்கு பண உதவி, ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு இவரே மூல காரணம் ஆவார். பாகிஸ்தானில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள் இவருக்கு ஆதரவாக உள்ளன. எனவே இந்த தடை என்பதும் கூட செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.
ஜமாத் உத் தவா அமைப்பின் கீழ் 300 செமினரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ஒரு பதிப்பகம், ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை உள்ளன. இந்த இரு அமைப்புகளிலும் சேர்த்து மொத்தமாக 50,000 உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள், சம்பளத்திற்கு வேலை பார்ப்போர் உள்ளனராம்.
இந்த அமைப்பு முன்பு லஷ்கர் இ தொய்பா என்ற பெயரில் இயங்கி வந்தது. ஆனால் மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்த அமைப்பு சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டது. இதையடுத்து ஜமாத் உத் தவா என்ற முகமூடிக்கு மாறினார் ஹபீஸ். சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்திருப்பதும் நினைவிருக்கலாம். இதையடுத்து இவரைக் காப்பாற்ற கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது பாகிஸ்தான் அரசு. பின்னர் 2017ம் ஆண்டு இவரை விடுவித்தது.