தீவிரவாதிகளுக்கு நிற்காத நிதி உதவி.. விளாசும் FATF.. பிளாக் லிஸ்டுக்கு போகிறதா பாகிஸ்தான்?
இஸ்லாமாபாத்: தீவிரவாதி மசூத் ஆசார் மாயமாகிவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும், சர்வதே நிதி நடவடிக்கை பணிக் குழு (FATF) ஆலோசனைக் கூட்டம் கூட உள்ள நிலையில், பாகிஸ்தான் இவ்வாறு அறிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பது குறித்து நிதி நடவடிக்கை பணிக்குழு நேற்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
பயங்கரவாத நிதியுதவி தடுப்புகள் கடுமையாக்கப்பட்ட போதிலும், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதிகளால் பயங்கரவாத குழுக்கள் பலனடைகின்றன என்று FATF நேற்று கூறியிருந்தது.
சிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்
பாகிஸ்தான்
பாகிஸ்தான் என்று பெயரை குறிப்பிடாவிட்டாலும் மறைமுகமாக FATF தனது அறிக்கையில் சாடியிருந்தது. ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் அல்-கொய்தா போன்ற குழுக்களின் நிதியைக் குறைக்க உதவிய பயங்கரவாத அமைப்பின் நிதி குறித்த பரிவர்த்தனைகளை FATF கடுமையாக்கியுள்ளது. இருப்பினும், பல்வேறு குழுக்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமும், உலகெங்கிலும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி திரட்டுகின்றன என்று எப்ஏடிஎப் அறிக்கை சுட்டிக் காட்டியது.
இம்ரான் கான்
ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இல்லை என்று பிரதமர் இம்ரான்கான் நேற்று உடனடியாக மறுப்பு தெரிவித்தார். இம்ரான்கான் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று பேசுகையில், "இங்கு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் கிடையாது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும்" என்று இம்ரான்கான் கூறினார், "கடந்த காலங்களில் அப்படி நிலைமை இருந்திருக்கலாம், ஆனால், இந்த நேரத்தில் நான் உங்களுக்கு அப்படி இல்லை என உறுதியாக சொல்ல முடியும்" என்றார் அவர்.
ரகசியம்
ஒருபக்கம் இப்படி இம்ரான் கூறிய நிலையில்தான், மசூத் ஆசார் மாயம் என்ற தகவலை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடந்த எப்ஏடிஎப் கூட்டத்தில் பாகிஸ்தான் இவ்வாறு கூறியதாம். அந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், இந்திய உளவுத்துறை தகவல்படி, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகள், இணைந்து மசூத் ஆசார் மற்றும் அவர் குடும்பத்தினரையும், பத்திரமான ஒரு இடத்திற்கு நகர்த்திவிட்டதாக, கூறப்படுகிறது. பவல்பூர்-கராச்சி சாலையிலுள்ள ஒரு பகுதியில் பாதுகாப்புடன் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக் தகவல்கள் கூறுகின்றன.
மூளை
இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர், மசூத் அசார். மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின் பின்னணி இவர்தான். ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரான மசூத்தை, சர்வதேச தீவிரவாதி என்று அமெரிக்காவும் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 1ம் தேதி, ஐநா பாதுகாப்பு கவுன்சில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானை எப்ஏடிஎப் அமைப்பு தற்போது சாம்பல் பட்டியலில் வைத்துள்ளது. அது விளாசியுள்ளதை பார்த்தால், சீக்கிரமே பாகிஸ்தானை கருப்பு பட்டியலுக்கு நகர்த்தும் என தெரிகிறது.