'அமிதாப்புக்கு கோபம் வந்திடுச்சே..' இந்தியாவுக்கு போட்டியாக விண்வெளியிலும் குதிக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: தங்களின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் செயற்கைக்கோள் ஏவுதல் வசதிகளைப் பயன்படுத்தி 2022ஆம் ஆண்டில் தனது முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பப்போவதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.
இந்தியா தனது இரண்டாவது நிலவு ஆராய்ச்சி பயணமான சந்திரயான் -2 விண்கலத்தை கடந்த திங்களன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
"நம்ம கூட சுதந்திரம் பெற்ற இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில், அமெரிக்கா, சீனாவுக்கே சவால்விடுகிறது. நாம இன்னும் சொல்லிக்கிற மாதிரி எதுவுமே செய்யவில்லையே" என்று சந்திராயன் 2 விண்கலத்தை இந்தியா விண்ணில் ஏவிய அடுத்த நொடி முதல், பாகிஸ்தான் நெட்டிசன்கள் பொங்கி தீர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், விண்வெளி பயணத்திற்கான விண்வெளி வீரரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை 2020ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
"விண்வெளிக்கு அனுப்பப்படும் முதல் பாகிஸ்தானியருக்கான தேர்வு நடைமுறை, 2020ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என்று பெருமிதம் கொள்கிறேன். 50 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர், அதில் சிறந்தவர்களை கொண்டு, பட்டியல் 25 ஆகக் குறைக்கப்படும். பிறகு, அதிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
2022 ஆம் ஆண்டில் எங்கள் முதல் நபரை விண்வெளிக்கு அனுப்புவோம். இது எங்கள் நாட்டின் மிகப்பெரிய விண்வெளி நிகழ்வாக இது இருக்கும் " இவ்வாறு சவுத்ரி ட்வீட் ஒன்றில், தெரிவித்துள்ளார்.
விண்வெளி பயணத்திற்கான தேர்வு நடைமுறையில், பாகிஸ்தான் விமானப்படை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சவுத்ரி தெரிவித்தார்.
இதை பார்த்தால், அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்திடுச்சே.. என சொல்லி சொல்லியே அப்பாவி நபரை உசுப்பேற்றும் சினிமா காட்சிதான் நினைவுக்கு வருகிறது.