"நான் மலாலா இல்லை": மலாலாவுக்கு எதிரான தினத்தை அனுசரித்த பாகிஸ்தான் தனியார் பள்ளிகள்
இஸ்லாமாபாத்: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் தனியார் பள்ளிகளை உள்ளடக்கிய சங்கம் நான் மலாலா இல்லை என்ற பெயரில் ஒரு தினத்த அனுசரித்தனர்.
சர்ச்சைக்குரிய இங்கிலாந்து எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மலாலா ஆதரவாக இருப்பதற்குக் கண்டன் தெரிவித்து இந்த நூதன எதிர்ப்பை அவர்கள் காட்டியுள்ளனர்.
17 வயதான மலாலா, 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மிங்கோரா நகரில் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் அவர் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். அவருக்கு தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ அம் மலாலா அதாவது நான் மலாலா என்பது மலாலாவின் சுயசரிதை நூலாகும். இதையே நான் மலாலா இல்லை என்று கூறி இந்த சங்கம் தனது எதிர்ப்பைக் காட்டியgள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பி்ன் தலைவரான மிர்ஸா காசிப் அலி கூறுகையில், சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் ஆகியோருடன் கூட்டு சேர்ந்துள்ளார் மலாலா. ருஷ்டிக்கு அவர் ஆதரவு தெரிவிக்கிறார். ருஷ்டி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர். அவருடன் மலாலா சேர்ந்திருப்பதை ஏற்க முடியாது.
மேலும் மலாலா எழுதியுள்ள புத்தகமும் கூட சர்ச்சைக்கிடமானது. அதில் ருஷ்டி ஆதரவே அதிகம் காணப்படுகிறது. அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார் அலி.
சல்மான் ருஷ்டி 1989 ஆம் ஆண்டு தி சாத்தானிக் வெர்சஸ் என்ற நூலை எழுதி உலக முஸ்லீம்களின் கடும் கண்டனத்தையும், ஈரான் மத குரு கொமேனியால் மரண தண்டனையும் விதிக்கப்பட்டவர் ஆவார். அதேபோல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா 1994 ஆம் ஆண்டு எழுதிய லஜ்ஜா நூலும் சர்ச்சையை கிளப்பியது என்பது நினைவிருக்கலாம்.