இந்தியாவுடன் பேசத் தயாராகும் பாக். - விபரங்கள் கோரி இந்திய தூதருக்கு அழைப்பு
இஸ்லாமாபாத் : இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணத்தின் போது நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் யூசுப் ரசா கிலானி ஆகியோர் சார்க் மாநாட்டின் போது நடைபெற்ற சந்திப்பின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. ஆனால், அப்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்துப் பேசியதால் அந்தப் பயணத்தை இந்தியா ரத்து செய்தது.
இதையடுத்து, கடந்த 13-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி, வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு செல்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் தஸ்னியா அஸ்லாம், "இந்திய பிரதமர் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் பாகிஸ்தானுக்கு வரும் மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது எந்த அம்சங்கள் இடம் பெறும் என்பது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. எனினும் இந்த சுற்றுப்பயணத்தின் போது காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று வெளியுறவுதுறை அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணத்தின் போது நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் டெல்லியில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத் சென்றடைந்தார். அங்கு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் ஆய்சாஸ் செத்ரியை அப்துல் பாஸித் சந்தித்துப் பேசினார்.
இதேபோல, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோரையும் அப்துல் பாஸித் சந்தித்துப் பேசவுள்ளார்.