நாங்கள் ஒன்றும் உங்கள் காலனி நாடு கிடையாது.. அமெரிக்காவுக்கு பாக். எச்சரிக்கை!
வாஷிங்டன்: பாகிஸ்தான் ஒன்றும் அமெரிக்காவின் காலனி நாடு கிடையாது என்று அந்த நாட்டு உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் அளித்த பேட்டியொன்று, பாகிஸ்தானை கடுப்புக்குள்ளாக்கியுள்ளது.
தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க படையால் கொல்லப்பட்ட 5வது ஆண்டு தினத்தையொட்டி, ஃபாக்ஸ் செய்தி சேனலுக்கு டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியின்போது, நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்தால், பாகிஸ்தான் சிறையிலுள்ள ஷகில் அப்ரிடியை 2 நிமிடங்களில் விடுதலை செய்ய வைத்துவிடுவேன் என்று கூறினார்.
பின்லேடன்
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பு கொல்ல உதவி செய்தவர் ஷகில் அப்ரிடியாகும். இந்த நிலையில், பாகிஸ்தானில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தான் ட்ரம்ப் இவ்வாறு கூறியிருந்தார்.
பாகிஸ்தான் கோபம்
இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார், "பாகிஸ்தான், அமெரிக்காவின் காலனி நாடு கிடையாது. ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகவே பதவியேற்றாலும் கூட, அப்ரிடி வழக்கில் என்ன செய்ய வேண்டும் என்பதை பாகிஸ்தான் நீதிமன்றம், பாகிஸ்தான் அரசுதான் முடிவு செய்ய முடியுமே தவிர, அமெரிக்காவால் முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
போர் விமானம்
இதனிடையே, பாகிஸ்தானுக்கு எப்-16 எனும் அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா மானிய விலையில் வழங்க முடிவு செய்திருந்தது. 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த விமானங்களை குறைந்த விலைக்கு பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க செனட் உறுப்பினர்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நெருக்கடியில் பாகிஸ்தான்
அமெரிக்க வரிப் பணத்தை பாகிஸ்தானுக்கு தாரை வார்க்க கூடாது என்பது செனட் உறுப்பினர்கள் வாதமாக உள்ளது. தீவிரவாதிகளை ஒடுக்க பயன்படுத்தாமல் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு அந்த விமானங்கள் பயன்படும் என்பது இந்திய தரப்பு நெருக்குதலுக்கு காரணமாக உள்ளது.