இந்தியா தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்.. திருப்பி தாக்குவோம்.. இம்ரான் கான் கடும் எச்சரிக்கை!
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உடனே நாங்களும் திருப்பி தாக்குவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உடனே நாங்களும் திருப்பி தாக்குவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பின் தற்போதுதான் இம்ரான் கான் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
என்ன பயன்
இம்ரான்கான் தனது பேட்டியில், இந்தியா மீது நடந்த தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன். எங்கள் நாடு இப்போது நிலையான தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இப்போது எங்களை ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள். எங்கள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுகிறீர்கள்.
உதவி
எங்கள் நாட்டிலும் லட்சக்கணக்காக பாகிஸ்தான் மக்கள் சண்டையிட்டு சாகிறார்கள். அதற்கு யார் பொறுப்பேற்பது. உங்களுக்கு நாங்கள் உதவ வேண்டும் என்றால் உதவுவோம். இந்தியாவிற்கு தேவையான எல்லா விதமான உதவியையும் பாகிஸ்தான் அளிக்கும். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
இந்தியாதான் காரணம்
ஆனால் ஒன்று சொல்கிறேன். இந்த சம்பவத்திற்கு இந்தியாதான் காரணம். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் உயிரை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களை இந்திய ராணுவம் மோசமாக நடத்தி இருக்கிறது. அதுதான் அவர்கள் இப்போது கோபம் கொள்ள செய்து உள்ளது. அங்கு இந்திய ராணுவம் செய்த வன்முறைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
போர் செய்யலாம்
இரண்டு நாடுகள் போரை தொடங்குவது எளிதான காரியம்தான். ஆனால் போரை முடிப்பது மனிதர்கள் கையில் இல்லை: கடவுள் கையில்தான் இருக்கிறது. நாம் போரை நிறுத்த முடியாது. பேச்சுவார்த்தையில் அனைத்தையும் சரி செய்யலாம். உங்களுக்கு இது தேர்தல் வருடம். இப்போது வன்முறை சரியாக இருக்காது. ஆனால் நீங்கள் தாக்கினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உடனே நாங்களும் திருப்பி தாக்குவோம், என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.