பாகிஸ்தானில் கவுரவக் கொலைக்கு எதிராக முஸ்லீம் தலைவர்கள் பத்வா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த 40 முஸ்லீம் தலைவர்கள் கவுரவக் கொலைக்கு எதிராக பத்வா விட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள சன்னி இதிஹாத் கவுன்சிலை சேர்ந்த 40 முஸ்லீம் தலைவர்கள் கவுரவ கொலைக்கு எதிராக பத்வா விட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கவுரவ கொலை என்பது இஸ்லாத்திற்கு எதிரானது. அது மன்னிக்கப்பட முடியாத பாவம் ஆகும். ஒரு பெண் தனது மனதிற்கு பிடித்த நபரை திருமணம் செய்து கொண்டதற்காக அவரை உயிருடன் எரித்துக் கொலை செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது.
குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் கொலை செய்வது அறியாமையை காட்டுகிறது. கவுரவக் கொலைகளை தடுக்க அரசு உரிய சட்டம் கொண்டு வர வேண்டும். பெண்களை கொலை செய்வது மன்னிக்க முடியாத குற்றம் என்று அரசு அறிவிக்க வேண்டும். பெண்களின் உரிமையை பாதுகாப்பது இஸ்லாமிய அரசின் கடமை ஆகும் என்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் 1, 100 பெண்கள் கவுரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.