கள்ளநோட்டு, தீவிரவாதிகளுக்கு உதவி: பாக். தூதரக அதிகாரியை வெளியேற்றிய வங்கதேசம்
டாக்கா: தீவிரவாதிகளுக்கு உதவியது மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்க இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக டாக்காவில் பணியாற்றிய பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வங்கதசே அரசு நாட்டை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி முகமது மசார் கான். அவர் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அஸ்ஸாம், மேற்கு வங்க எல்லைகள் மூலம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 12ம் தேதி வங்கதேச போலீசார் கானை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதில் முன்னாள் ராணுவ அதிகாரிகள், படித்தவர்கள் மற்றும் சிறு சிறு குற்றவாளிகள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால் கான் தூதரக அதிகாரி என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கானை நாட்டை விட்டு வெளியேறுமாறு வங்க தேச அரசு உத்தரவிட்டுள்ளது. கான் கைது செய்யப்பட்ட பிறகு டாக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 4 பேர் கடந்த மாதம் டாக்காவில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பது தெரிய வந்தது.