இந்தா.. சாப்பிடு.. சாப்பிடு.. வாயை திற.. பேசாமல் நின்ற மாணவனை மிரள வைத்த ஆசிரியர்
7 வயது சிறுவனுக்கு புல்லை கொடுத்து ஆசிரியர் சாப்பிட வைத்துள்ளார்
இஸ்லாமாபாத்: "ஒழுங்கா படிக்கலேன்னா நீ மாடு மேய்க்கதான் லாயக்கு" என்று நம்ம ஊர் டீச்சர்கள் சொல்வார்கள். ஆனால் பாகிஸ்தானில் கொஞ்சம் அட்வான்சாக போய்விட்டார்கள்!
பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது. இது ஒரு தொடக்கப்பள்ளி என்பதால் எல்லாருமே சின்ன சின்ன குழந்தைகள்தான். இந்த ஸ்கூல் வாத்தியார் பெயர்தான் ஹமீத் ரசா!
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த சம்பவம் நடந்தது. அன்னைக்கு கிளாசில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். கஸான் என்ற சிறுவன் பாடத்தை சரியாக கவனிக்கவில்லை போல இருக்கிறது. அவனுக்கு வயசு வெறும் 7தான்!
இதை பார்த்த வாத்தியார் கஸானை கூப்பிட்டு, கையில் புத்தகத்தை கொடுத்து மற்ற மாணவர்கள் முன்பு சத்தமாக படிக்க சொன்னார். ஆனால் கஸான் படிக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். இதை பார்த்ததும் வாத்தியாருக்கு கோபம் அதிகமாகிவிட்டது. அதனால் வேகவேகமாக கிளாஸை விட்டு வெளியே ஓடினார்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கையில் புல், பூண்டுகளை எடுத்து கொண்டு வந்தார். பள்ளி வளாகத்தில் அந்த புற்கள் இருந்திக்கும்போல! கஸானிடம் வந்த அவர், கையில் வைத்திருந்த புல், பூண்டை சாப்பிடு, சாப்பிடு என்றார். புல்லை பார்த்ததும் கஸான் மிரண்டு நின்றான்.
ஆனாலும் சாப்பிடும்படி வற்புறுத்தினார் வாத்தியார். இந்த விவகாரம் வெளியே தெரிந்து பெரிய சர்ச்சையாகிவிட்டது. கடைசியில் மாவட்ட போலீஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், உடனடியாக இதை பற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பதேபூர் போலீசார் வாத்தியார் ஹமீத் ரசா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.