திருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்
பாகிஸ்தானில் பெண்களை வாங்கி சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீன தூதரகம் மறுக்கிறது.
பீஜிங்: சீன இளைஞர்களின் கவனம் பாகிஸ்தானிலுள்ள ஏழைக் கிறிஸ்தவப் பெண்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் ஏராளமான சீன இளைஞர்கள், பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். பாகிஸ்தானில் பெண்களை வாங்கி சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீன தூதரகம் மறுக்கிறது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல ஆண்களுக்கு திருமணம் செய்த பெண்கள் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது காரணம் படிப்பு, வேலை, தகுதிக்கு ஏற்ற பெண்கள் கிடைப்பதில்லை. இதனால் ஜாதி மாறி திருமணம் செய்யவும் தயராக உள்ளனர். நம் ஊரிலே இப்படி என்றால் மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ள சீனாவில் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவேதான் நாடு விட்டு நாடு வந்து பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
சீனாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் சீனாவில் ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் சீன ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
சீனா ஆண்களின் திருமணம்
வியட்நாம், லாஓஸ், வடகொரியா ஆகிய நாடுகளிலிருந்து பெண்களை சீன இளைஞர்கள் திருமணம் செய்துவந்துள்ளனர். தற்போது, சீன இளைஞர்களின் கவனம், பாகிஸ்தானிலுள்ள ஏழைக் கிறிஸ்தவப் பெண்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் ஏராளமான சீன இளைஞர்கள், பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.
சீன ஏஜெண்டுகள்
சீன ஆண்கள் பாகிஸ்தானில் ஏஜெண்டுகள் மூலம் பெரும் தொகையை கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
இஸ்லாமிய குடும்பங்கள் இந்த திருமணத்திற்கு சம்மதிப்பதில்லை என்பதால் அவர்கள் கிறுஸ்துவ குடும்பங்களையே குறிவைக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் எதிர்காலம் நல்ல படியாக அமையும் என்று பொய் கூறி பெற்றோர்களும் பெண்களை அனுப்பி வைத்துவிடுகின்றனர்.
பொய் சொல்லி திருமணம்
பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணம்தான் சீனர்களின் குறிவைக்கும் பகுதியாக உள்ளது. இதற்கென, இந்தப் பகுதியில் ஏராளமான தரகர்கள் செயல்படுகின்றனர். சீனர்களின் வேலைவாய்ப்பு, சொத்து, குடும்பம் குறித்து பொய்யான தகவல்களைச் சொல்லி திருமணம் செய்துகொள்கின்றனர்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பாகிஸ்தானைச் சேர்ந்த 1000 பெண்களை சீன இளைஞர்கள் திருமணம் செய்திருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மைனர் பெண்கள்
சீனா செல்லும் பெண்கள் அடிமைகள் போல் நடத்தப் படுகிறார்கள் என்று குற்றசாட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்களின் வயது, மணமகன்களின் வயதில் பாதி கூட இருப்பதில்லை என்ற கொடுமையும் நிகழ்கிறது. அதை விட கொடுமை பாகிஸ்தானில் பெண்களை வாங்கி சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பாலியல் தொழில்
பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த நதாசா என்ற இளம்பெண், தன்னுடைய கணவர் தன்னை பாகிஸ்தானிலிருந்து விலைக்கு வாங்கியதாகவும், அங்கே தன்னை பாலியல் தொழிலுக்கு தள்ளினார் என்றும் கூறியுள்ளார். பெற்றோர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மகள்களைத் திருமணம் செய்துவைக்கின்றனர். திருமணம் செய்யப்படும் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள், கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
மனிதக்கடத்தல்
இது மனிதக் கடத்தல். பேராசைதான் இந்தப் பிரச்னைகளுக்கான முதற்காரணம். நான் சந்தித்த பெரும்பாலான பெண்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். சீனத் தூதரகம், எந்த ஆதாரங்களையும் முறையாக சோதனை செய்யாமல் விசா வழங்கிவிடுகிறார்கள் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான அமைச்சர் இஜாஸ் அலாம் அகஸ்டின் கூறியுள்ளார்.
மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
மனித உரிமை அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் பாகிஸ்தான் பெண்கள், பாலியல் அடிமைகளாக இருக்க வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது என்பதற்கான ஆவணங்கள் அதிகரித்துவருகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பு, எட்டு சீனர்களையும், நான்கு பாகிஸ்தானியர்களையும் கைது செய்துள்ளது. இந்த விவகாரம் இரு நாட்டிலும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.