ஜெருசலேம் விவகாரம்.. டிரம்பின் திட்டத்தை ஏற்க முடியாது.. பாலஸ்தீனம் திட்டவட்டம்
காஸா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வகுத்துள்ள மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை ஏற்க முடியாது என பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹமாஸ் தெரிவித்தார்.
ஜெருசேலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தார்.
இதை பாலஸ்தீனம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பாலஸ்தீனம்
இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என டிரம்ப் அறிவித்ததன் மூலம் அவர் ஒரு நேர்மையான மத்தியஸ்தராக இருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு பாலஸ்தீன நாட்டை உருவாக்கலாம்.
டிரம்ப்
இஸ்ரேல் 4 ஆண்டுகளுக்கு குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை வாஷிங்டனில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் நேற்று அறிவித்தார். அமைதியை நோக்கி இஸ்ரேல் அடியெடுத்து வைத்துள்ளது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
ஏற்க முடியாது
செவ்வாய்க்கிழமை இரவு இதை அறிவித்ததில் இருந்து காஸாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹமாஸ் கூறுகையில் பாலஸ்தீனத்தின் தலைநகரான ஜெருசலேமிற்கு பதிலாக எங்களுக்கு எந்த நாடு கொடுத்தாலும் அதை ஏற்க மாட்டோம். ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என கூறி ஒரு சார்பாக டிரம்ப் பேசுகிறார்.
திட்டம்
டிரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டமானது மிகவும் மோசமானது. அனைவரின் கோபத்தையும் தூண்டியுள்ளது என்றார். காஸா நகரில் பாலஸ்தீனியர்கள் டயர்களை எரித்து போராட்டம் செய்தனர். மேலும் டிரம்ப் ஒரு முட்டாள் என கோஷமிட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில் டிரம்பின் திட்டத்தை எதிர்ப்பதற்காகவே இங்கு வந்துள்ளோம். டிரம்ப் கூறியுள்ள யோசனை வெட்கக் கேடானது. அரபு நாடுகளின் அழிவிற்கு அமெரிக்காதான் பொறுப்பு என்றனர்.