உலகப் பார்வை: பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை
பாலத்தீனத்தை சேர்ந்த பேராசிரியரும், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினருமான ஃபாடி அல்-பாத்ஷ் என்பவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மசூதியை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வட கொரியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு
வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் அணுசக்தி மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளதை பல்வேறு உலக நாடுகள் வரவேற்றுள்ளன. வட கொரியாவின் இந்த நடவடிக்கை உலகத்துக்கான ஒரு "நல்ல செய்தி" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், இது அர்த்தமுள்ள முன்னேற்றம் என்று தென் கொரியாவும் கருத்துத் தெரிவித்துள்ளன.
ஜார்ஜ் புஷின் தாயாருக்கு இறுதி அஞ்சலி
சில நாட்களுக்கு முன்னர் தனது 92 ஆவது வயதில் இறந்த அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் எச் டபள்யு புஷ்ஷின் மனைவியும், ஜார்ஜ் டபள்யு புஷ்ஷின் தாயுமான பார்பராவின் இறுதி அஞ்சலி அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்தது. இதில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
சீர்த்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய அழைப்பு
நிகராகுவா நாட்டின் அதிபர் டேனியல் ஒர்டேகா தனது அரசாங்கம் ஓய்வூதிய சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அந்நாட்டில் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு புதனன்று ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து வன்முறைகள் வெடித்துள்ளன.
பிற செய்திகள்:
- குழந்தைகளை வல்லுறவு செய்பவருக்கு மரண தண்டனை - மத்திய அரசு ஒப்புதல்
- வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன?
- "சிரியா 'ரசாயன' தாக்குதல்: சம்பவ இடத்துக்கு புறப்பட்டது நிபுணர் குழு"
- தச்சுக் கலையை காதலிக்கும் அப்பர் லட்சுமணன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை என்ன?