சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு.... நவாஸ் ஷெரீப்பை விசாரிக்க பாக். சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பனாமா நாட்டில் முதலீடு செய்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இஸ்லாமாபாத்: பனாமா நாட்டில் முதலீடு செய்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு பனாமா நாட்டில் பல்வேறு கம்பெனிகளில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் மில்லியன் டாலர்கள் பணத்தை பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு தயார் என்றும் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்கை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
மேலும் 60 நாள்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் ஹாசன், உசேன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
விசாரித்த 5 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறியதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
பனாமா நாட்டில் வெளிநாட்டு பிரமுகர்கள் முதலீடு செய்ததும், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் முதலீடு செய்தது தெரியவந்தது.